சந்தோஷம் என்பது ஒரு வித உணர்வு. மகிழ்ச்சி, திருப்தி, நிம்மதி, சிரிப்பு, குதூகலம் என பல பெயர்கள் உண்டு. மனிதர்களாக பிறந்த நமக்கு உண்மையா உணர்வு பூர்வமான சந்தோஷத்தை கொடுப்பது எது? உண்மையில் சந்தோஷம் என்றால் என்ன? இன்றைய சூழலில் உண்மையான சந்தோஷத்தை நாம் உணருகிறோமா ? உண்மையில் நாம் யாரும் நம் சந்தோஷ உணர்வுகளை இக்கால சூழலில் பகிர்ந்து கொள்வது இல்லை.
இயற்கையை ரசிக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் செயற்கையை ரசிக்கும் போது கிடைப்பதில்லை. இன்றும் நகர வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் பல பேர் விடுமுறை நாட்கள் வந்ததும் தேடி ஓடுவது இயற்கை சார்ந்த இடங்களையே. உண்மையான சந்தோஷம் மனதில் சிலிர்ப்பை உண்டாக்கும், ஆத்ம திருப்தியை கொடுக்கும். வலியை உணர்வதால் மட்டுமல்ல, உண்மையான சந்தோஷத்திலும் கண்ணீர் வரும், அதுவே ஆனந்த கண்ணீர்.
யார் ஒருவருக்கு ஒரு விஷயம் நிரந்தரமான ஆனந்த உணர்வை கொடுக்கிறதோ அதுவே உண்மையான சந்தோஷம். பெற்றோர்களுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் போது, மகனை ஒரு பொறுப்புள்ளவனாக பார்க்கும் போது, தம்பதியருக்கு குழந்தை பிறக்கும் போது, ஒரு தாய் தன் குழந்தைகள் பசியாறுவதை பார்க்கும் போது என இவையெல்லாம் நிரந்தரமான மாறாத சந்தோஷங்கள். எதிர்பாப்பு இல்லாத ஆனந்தம் பேரானந்தம்.
சந்தோஷம் என்கிற உணர்வை சிலர் வெறும் வார்த்தையாக தான் பார்க்கின்றனர். கேளிக்கை ஆடம்பரம் இவையே சந்தோஷம் என கூறுபவர் பலர். எத்தனை முறை கேளிக்கைகளில் ஈடுபட்டாலும் மனது திருப்தியடைவது இல்லை, பிறகு எப்படி அது சந்தோஷம் ஆகும். ஆடம்பரம், நண்பர் ஒருவர் தன் தகுதிக்கும் மீறி தன் மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினார், அதில் அவர் உணர்ந்தது கடன் சுமையே, மகளை திருமணம் செய்து கொடுத்த சந்தோஷத்தை மீறி அவர் உணர்ந்தது கடன் கவலை மட்டுமே.
உண்மையான சந்தோஷத்தை உணர வேண்டும். உணர்வுகளின் வேறுபாடு புரிந்து கொண்டால் பலவித மன உளைச்சல்களை தவிர்க்கலாம். ஏமாற்றங்கள் ஏற்படாது. இறைவன் நமக்கு உணரக் கொடுத்துள்ள உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து புரிந்து நம் வாழ்க்கைநை வழி நடத்தினால் என்றென்றும் சந்தோஷமே ஆனந்தமே.

பத்மபிரியா